இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 40 - 12 டிசம்பர் 2005

அன்புடையீர். வணக்கம்,

சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழைப் படித்து நிறைய பேர் வாழ்த்தியுள்ளார்கள். கதை மட்டுமல்லாது கட்டுரைகளையும் வெளியிடுமாறு வேண்டியுள்ளார்கள். அனைவருக்கும் எனது நன்றிகள்.

இந்த இணைய இதழில் நான் படித்து வியந்தவைகள் மட்டுமல்ல, மக்கள் முன்னெடுக்க வேண்டிய உயர்நத கருத்துருக்கள் பற்றிய குறிப்புகளும் இதில் இடம் பெறும். இந்த இதழில் ஆறுகள் இணைப்புப் பற்றிய கட்டுரையை இணைத்துள்ளேன். இது போன்ற உண்மைகளை உணராமல் நம் மக்கள் இருப்பதற்கான காரணங்கள் எவை?

புயல் வெள்ளம் எனத் தமிழகமே வெள்ளக்காடாய் மாறிய பிறகும், இதற்கான உண்மை நிலையைச் சொல்லுகிற இதழ்கள் எத்தனை? கருத்துச் சொல்லவேண்டிய இதழ்களும், தொடர்புக் கருவிகளும் பொழுதுபோக்கையே முதன்மைப்படுத்தி வாணிகம் செய்வதால், மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு, பகுத்துணரும் சக்தியற்று இருக்கிறார்கள். இது அவர்களது குறையல்ல. சரியான சூழலை அமைத்துக் கொடுக்காத நமது குறையே இதற்குக் காரணம். இந்த இதழில் இதழ்கள் ஆற்ற வேண்டிய பணியினை வரிசைப்படுத்தியுள்ளேன். மக்களுக்கான விழிப்புணர்வை ஊக்குவதில் நாம் தொடர்ந்து இயங்குவோமாக.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
12 - 12 - 2005



வேளாண்மையும் ஆறுகள் இணைப்பும்
முனைவர் பழ. கோமதிநாயகம்.

தமிழர்களின் இன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்டும் இரண்டு செய்திகளை இத்தலைப்பு கொண்டுள்ளது. வேளாண்மை தமிழன் ஏமாந்த வரலாற்றையும், ஆறுகள் இணைப்பு - தமிழன் ஏமாற்றப்படுகின்ற வரலாற்றையும் கூறுகின்றன.

சங்க காலம் முதலே, தமிழர்களின் வாழ்விலும், நாட்டின் பொருளாதாரத்திலும் வேளாண்மை மையம் கொண்டிருப்பதை

இரப்போர் சுற்றமும் புறப்போர் கொற்றமும்
உழவிடை விளைப் போர்.

என்ற சிலப்பதிகார வரிகள் தெரிவிக்கின்றன. சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம் சமகாலத்திய பிற சமுதாயங்களைவிட மேம்பட்டு விளங்கியமைக்குக் காரணம், அவர்களின் தொழில் நுட்பத்திறன், மண்வளம், நீர்வளம் மற்றும் பருவ காலங்களுக்கேற்ப பயிர்களை சரியான உழவியல் தொழில் நுட்பத்துடன் பயிரிட்டனர். வேளாண்மை வளர்ச்சிக்குத் தண்ணீரே ஆதாரம். ஆனால் மழை பெய்யும் நாட்களைக் குறைவாகக் கொண்ட தமிழ்நாட்டில், மழை நீரைச் சேமிக்க ஏரிகள், குளங்கள் அமைத்து, ஆற்றுக்கால், ஊற்றுக்கால் தோண்டி, அணைக்கட்டுகள் கட்டி சிறந்த பாசன வசதிகளை ஏற்படுத்திய தொழில் நுட்பம் இன்றளவும் ஏற்புடையனவாக இருப்பதே அவற்றின் சிறப்புக்குச் சான்று. கல்வெட்டுச் செய்திகள் மூலம், சோழநாட்டின் நெல்விளைச்சலைக் கொண்ட சோழப் பேரரசர்கள் ஆட்சி நடத்தினர். போர் புரிந்தனர். உலகம் சுற்றினர். நெல்விளைச்சலில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏக்கருக்கு 2 டன் விளைந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்கத் தக்க ஆலோசனைகளைக்கூற 4 நெல் சாகுபடி மற்றும் பாசன வல்லுனர்களை ஐ.நா. நிறுவனம் 1948 இல் அனுப்பியது. அதில் 3 பேர் தமிழர்கள். ஒருவர் வங்காளி. தாய்லாந்து மக்கள் நேரடி நெல் விதைப்பதை மட்டுமே அறிந்தவர்கள். நெல் அறுவடை செய்தபின் வைக்கோலை வயலில் எரித்து விடுவார்கள்.

இங்கிருந்து சென்ற வல்லுநர்கள் தமிழர்களின் வழக்கமான பசுந்தாள் பயிரிட்டு மடித்துவிடும் முறையையும், நாற்றங்காலில் விதைத்து, பிறகு நாற்றைப் பிடுங்கி வயலில் நடும் முறையையும் அறிமுகப்படுத்தினார்கள். இந்த முறை சாகுபடியில் ஏக்கருக்கு 2 டன் விளைந்த நிலங்களில் 4 டன் விளைந்தது. தாய்லாந்து விவசாயிகள் இப்படி நெல் சாகுபடி செய்யும் முறைக்கு மதராஸ்முறை சாகுபடி என்று பெயரிட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது வேறு. 1960 களில் தமிழக வேளாண்மையில் பசுமைப் புரட்சி திணிக்கப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பசுமைப் புரட்சியைப் பற்றி 1960 களில் விவாதம் நடந்தது. சார்லஸ் எஸ்.டென்னிசன் என்பவர் - வியட்நாமின் போரினால் முடங்கிப்போன அமெரிக்கப் பொருளாதாரம், பசுமைப் புரட்சியால் மீண்டும் உயிர் பெறும். இரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். ஆசியாவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதால், ஆசிய மக்கள் கம்யூனிச பாதைக்குச் செல்வதைத் தடுக்க முடியும். எனவே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பசுமைப் புரட்சித் திட்டத்திற்கு மிக் முக்கிய இடம் அளிக்க வேண்டும். என்று பேசினார். மிகத் தெளிவாக யாருக்காகப் பசுமைப் புரட்சி என்பது புரிகிறதா?

நமது வேளாண் மக்களுக்கு இரசாயன உரம், உயர் விளைச்சல் இரக விதைகள் ஆகியவற்றின் மூலம் தற்போதைய உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று பசுமைப் புரட்சியாளர்கள் உறுதியளித்தனர். உண்மையில் உயர் விளைச்சல் இரக விதைகள் என்று ஏமாற்றுப் பெயர் சூட்டப்பட்ட விதைகள் எப்போதும் எங்கும் அதிக விளைச்சல் தருபவை அல்ல. தட்பவெட்ப சூழல் மற்றும் தேவையான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் தரப்பட்டதால்தான் விளைச்சல் அதிகரிக்கும். அதே நேரத்தில் இந்த இரகப் பயிர்கள் பூச்சி தாக்குதலுக்கு எளிதில் இலக்காகுபவை.

1960 - 80 வரையிலான பசுமைப் புரட்சி காலத்தில் உணவு உற்பத்தி 2 முதல் 3 மடங்கு அதிகரித்தது எப்படி? இதே காலகட்டத்தில் ஏராளமான நீர்ப்பாசனத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாசனப் பரப்பு பன்மடங்கு விரிவடைந்தது. ஒரு போக நிலங்கள் இருபோக நிலங்களாக மாறின. இதன் காரணமாகவே மொத்த உணவு உற்பத்தி அதிகரித்தது. உயர் விளைச்சல் இரகங்களும், இரசாயன உரங்களும் வானம் பார்த்த நிலங்களில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தவில்லை.

தண்ணீர் மிக முக்கிய இடுபொருளானது. கால்வாயில் உரிய நேரத்தில் தண்ணீர் வரவில்லை என்றால் பயிர் விளைச்சல் பாதிக்கும். போட்ட முதல் கிடைக்காது. இந்த நிலைமையில் விவசாயிகள் பெருமளவில் கிணறுகள் தோண்டினர். அவர்களுக்குக் கடன் கொடுத்துக் கிணறுகள் வெட்டத் தூண்டப்பட்டது. 1960 இல் 4300 இறவை எந்திரங்கள் இருந்த தமிழ்நாட்டில் 2000 இல் 16 இலட்சம் இறவை எந்திரங்கள் இறைக்க இறைக்க ஊறுவதற்கு நிலத்தடி நீர் வற்றாத சுரங்கம் அல்ல. எனவே விவசாயிகள் தங்கள் கிணறு வற்றிப் போனதும், நிலத்தை விற்றனர் அல்லது நிலத்தடி நீரைக் காசு கொடுத்து வாங்கினர். இப்படித் தவிக்கும் போது, தண்ணீர் கிடைக்க ஒரே வழி ஆறுகள் இணைப்பு என்று ஒரு கானல் நீர் காட்டப்படுகிறது.

பசுமைப் புரட்சியில் ஏமாந்த தமிழன் இப்போது ஆறுகள் இணைந்தால் எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று நம்புகிறான். கங்கை காவிரி இணைப்புத் திட்டத்தைப் பற்றி உண்மையான தகவல்களை யாரும் சொல்வதில்லை. தெரியாமலேயே அதைப்பற்றிப் பேசுகிறோம் - நம்புகிறோம்.

நமது நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தன. அப்போது நமது அரசு சேமிப்புக் கிடங்குகளில் ஏராளமான தானியங்கள் இருந்தன. இதைக் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. "தானியக் கையிருப்பு விநியோகத்தைச் சீரமைத்து, ஆண்டுதோறும் தானியங்கள் கெட்டு வீணாகாமல் இருக்க, அவற்றை வறுமைக் கோட்டிற்குக் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆண்டுகள் பல ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை. சில நாட்களுக்கு முன் தானிய இருப்பின் பெருமை ஒரு பக்கத்திலும், பட்டினிச் சாவு மறுபக்கத்திலும் தெரிவித்தன.

2002 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் நதிநீர் இணைப்பைப் பற்றி அனைத்து மாநில அரசுகளையும் கருத்துக் கோரியது. 2002 அக்டோபர் 31 ஆம் தேதி, நீதிபதிகள், மத்திய அரசு, மாநில அரசு இரண்டைத் தவிர வேறு யாரும் கருத்துத் தெரிவிக்காததால், அந்த அரசுகளுக்கு இத்திட்டத்தின் மீது எதிர்ப்பு இல்லை என்று கருதி, 10 ஆண்டுகளில் இந்திய ஆறுகள் இணைக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

டிசம்பர் 13 ஆம் தேதி இந்திய நதிகள் இணைக்கப்படும் என்ற முடிவை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

டிசம்பர் 16 ஆம் தேதி சுரேஷ் பிரபு தலைமையில் உயர்மட்ட செயற்குழு அமைக்கப்பட்டது.

அக்குழு 2003 சனவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் 3 கூட்டங்கள் நடத்தியது. 3 ஆவது கூட்டத்தில் 30 ஆறுகளை இணைக்கும் மாபெரும் திட்டத்தை அறிவித்தது. 5,60,000 கோடி செலவில் 31-12-2016 க்குள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய வரலாற்றிலேயே நீதிமன்ற உத்தரவினை மிகத் துரிதமாக அரச செயல்படுத்தியது இதுவேயாகும். இதனாலேயே ஏராளமான சந்தேகங்கள் எழுகின்றன.

அதற்கான நிதியை எப்படித் திரட்டப் போகிறீர்கள்? தனியார் முதலீடு வரவேற்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது நமது ஆறுகள் பண்ணாட்டு வணிக நிறுவனங்களின் உரிமையாகப் போகின்றனவா?

முக்கியமான கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகள் பல நாடுகளுக்கு ஊடாகச் செல்பவை. அந்த நாடுகளின் கருத்துக் கோரப்பட்டதா? நேபாளம், சீனா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் எதிர்க்கின்றன. வங்காள தேசம் தனது எதிர்ப்பை அதிகார பூர்வமாகத் தெரிவித்து விட்டது.

தமிழ்நாடு, அரியானா இரண்டு மாநிலங்கள் மட்டுமே இத்திட்டத்தை வரவேற்றுள்ளன. மற்ற மாநிலங்கள் எதிர்க்கின்றன. கங்கை ஆற்று வடிமுகத்தில் ஆண்டுக்கு ஒருவருக்குக் கிடைக்கும் தண்ணீர் 1450 கன மீட்டர். அளவுகோலின்படி இது தண்ணீர்ப் பற்றாக்குறை ஆற்றுப்படுகை. அப்படுகையில் உள்ள மக்களுக்குத் தேவையான 1700 கன மீட்டர் கிடைப்பதில்லை. அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்யாமல் அங்கிருந்து எப்படித் தண்ணீரைத் திருப்ப முடியும்? இதே போலத்தான் ஒரிசாவின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் மகாநதியைத் திருப்ப முடியாது.

தொழில் நுட்ப ரீதியாகவும ஏராளமான கேள்விகளுகுப் பதில் இல்லை. வெள்ளத்தைத் தடுப்பதற்காக இத்திட்டம் என்பது அபத்தம். பிரம்மபுத்திராவில் வினாடிக்கு 14 இலட்சம் கனஅடி வெள்ளம் வரும். இணைப்புக் கால்வாயின் கொள்ளவு வினாடிக்கு 50,000 கன அடி மட்டுமே, மீதம் உள்ள தண்ணீர் வெள்ளமாகவே இருக்கும்.

நீர்த் தேக்கங்கள் அமைப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வுகள் செய்யப்படவில்லை.

கால்வாய் செல்லும் பாதையும் ஆய்வு செய்யப்படவில்லை. முறையான ஆய்வு செய்யவே பல ஆண்டுகள் பிடிக்கும். அதன் பிறகு கட்டுமானப் பணிகள். எப்படி 2016 இல் இத் திட்டம் முடியும்?

இத்திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு 273 டி.எம்.சி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த 273 டி.எம்.சிக்காக எத்தனை கோடி தமிழகம் கொடுக்க வேண்டுமோ?

நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டவோ அலலது பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் கட்டவோ ஏரிகளும், ஏரிகள் சார்ந்த இடங்களும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. யாரும் கேட்காத காரணத்தால் தனிப்பட்டவர்களும் ஆக்கிரமிக்கின்றனர். இவ்வகையில் நீர் நிலைகள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இவை தடுக்கப்படவேண்டும். முன் யோசனையற்ற கட்டுமானப்பணிகளால் நீரோட்ட வழிகள் அடைக்கப்பட்டு தண்ணீர் திசை திருப்பி விடப்படுவதால், மீதமிருக்கும் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து பாதிக்கப்படுகின்றது. நமது தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளின் மொத்தக் கொள்ளவு 230 டி.எம்.சி. ஏரிகளை மீண்டும் உயிரோட்டமுள்ளதாகச் செய்தாலே நமது தண்ணீர்ப் பிரச்சனை தீரும்.

ஆண்டுக்கு 500 கோடி வீதம் செலவு செய்து 10 ஆண்டுகளில் அனைத்து ஏரிகளையும் புணரமைத்து, மழை நீரை போதுமான அளவு சேமிக்கும்படி செய்யமுடியும். விளைச்சலை அதிகரிப்பதன் மூலமும், சிக்கன நீர் பயன்பாட்டின் மூலமும், உணவு உற்பத்தியை அதிகரித்து, மீதமாகின்ற தண்ணீரைப் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

இத்தனைக்குப் பிறகும் ஆறுகள் இணைப்போம் என்று ஏமாறப் போகிறீர்களா?

- முனைவர். பழ. கோமதிநாயகம் -
நன்றி : தென்ஆசியச் செய்தி - 1-15 டிசம்பர் 2005 .




எங்கள் ஊரில்
எங்கள் ஊரில்
ஏழு கோவில்கள்
ஒரு ஆரம்பப்பள்ளி
இரண்டு மதுக்கடைகள்
ஒன்று கூட இல்லை
குப்பைத் தொட்டி.

வந்தியத்தேவன்.
நன்றி : சுற்றுச் சூழல் புதிய கல்வி டிச 2005




நாய்க்கு...

(o) சவரம் பண்ணிவிடுவோம்
(o) நகம் வெட்டிவிடுவோம்
(o) சாம்பூ குளியல் போட்டுவிடுவோம்
(o) ஒரு தடவை வீட்டுக்கு வந்து இதெல்லாம் செய்ய ரூ175 தான்
(o) அப்புறம் - நாய்க்கு வெறி தடுப்பூசி போட ரூ500
(o) பேன் வராமல் தடுக்க மாதம் ரூ150

சாமானியர்களே மயக்கம் வருதா?

நாள் முழுக்கக் கூலிவேலை செய்தால் ரூ 150 இல்லை என்கிறீர்களா?

இங்கே நாய்கள் மனிதர்களைவிட மரியாதையுடன் சோபாவில் படுக்க வைக்கப்படுவார்கள். மனிதர்கள் நாய்களைவிடக் கேவலமாக சாக்கடைக் கரையில் வசிப்பார்கள்.


நன்றி: ஒடுக்கப்பட்டோர் குரல் டிச 2005.




தமிழ்ச் சிற்றிதழ்களின் இன்றைய பணி
பொள்ளாச்சி நசன்

இன்றைய சூழலில் 100 க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிற்றிதழ்கள் வந்து கொண்டிருக் கின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சிற்றிதழ்கள் வருகின்றன. வெளிமாநிலங்களான புதுவை, கர்நாடகம், கேரளா, புது தில்லி போன்ற பகுதிகளிலிருந்தும் தமிழ்ச் சிற்றிதழ்கள் வருகின்றன.

பெங்களூரிலிருந்து ஊற்று, தமிழர் முழக்கம், புது தில்லியிலிருந்து வடக்கு வாசல், புதுச்சேரியிலிருந்து தெளிதமிழ், கரந்தடி, நற்றமிழ், வெல்லும் தூயதமிழ், கேரளாவிலிருந்து சேரத்தமிழ், அந்தமானிலிருந்து அந்தமான் முரசு, சென்னையிலிருந்து தமிழர் கண்ணோட்டம், சிந்தனையாளன், யாதும் ஊரே, தென் ஆசியச் செய்தி, மக்கள் நெஞ்சம், முகம், ஒடுக்கப்பட்டோர் குரல், பசுமைத் தாயகம், எழுகதிர், மீண்டும் கவிக் கொண்டல், இசைத்தமிழ், கலை, உழைக்கும் மக்கள் தமிழகம், தென்மொழி, தமிழ்ச் சிட்டு, கவிதாசரண், கண்ணியம், தலித் முரசு, செஞ்சியிலிருந்து குறிஞ்சி வட்டம், திருச்சியிலிருந்து நாளை விடியும், மூலிகைச் சஞ்சீவி, கவிக்காவிரி, சுற்றுச் சூழல் கல்வி, இப்படிக்கு, நந்தவனம், தஞ்சாவூரிலிருந்து சுகன், திண்டுக்கல்லிலிருந்து அன்பு வணக்கம், கல்ஓசை, கோவையிலிருந்து அருணனின் இளங்கதிர், மள்ளர் மலர், மதுரையிலிருந்து இலட்சியப் போராளி, தமிழ்ப் பாவை, தேமதுரத் தமிழோசை, புதிய ஆசிரியன், மனித உரிமைக் கங்காணி, நாமக்கல்லிருந்து ஊமையர் குரல், கள்ளக்குறிச்சியிலிருந்து குறள் மணம், கடத்தூரிலிருந்து தமிழ்க்குயில், புதுக்கோட்டையிலிருந்து தாழம்பூ, குறிஞ்சிப்பாடியிலிருந்து திசையெட்டும், திருநெல்வேலியிலிருந்து நம் வேர்கள், கரூரிலிருந்து பயணம் புதிது, விருதுநகரிலிருந்து பயணம், வள்ளியூரிலிருந்து வள்ளியூர் தென்றல், போன்ற இதழ்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன (இந்தப் பட்டியலில் விடுபட்ட இதழ்கள்கூட இருக்கலாம்)

சிற்றிதழ்கள் என்பது இலக்கு நோக்கிய, இலக்கிய நுட்பங்களையுடைய, கருத்துச் செறிவுடைய, மக்களை வழிநடத்துகிற, மக்களது சிக்கல்களை வெளிப்படுத்துகிற - படைப்பாக்கங்களைக் கொண்டுள்ள இதழ்கள் ஆகும். வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் அச்சாகும் பேரிதழ்கள் இவ்வகையான படைப்பாக்கங்களை வெளியிட மறுக்கும் பொழுது, ஒரு கிளர்ந்தெழுதலாக, ஒத்த கருத்துடையவர்களை இணைக்கிற இணைப்புப் பாலமாக, தொடர்பு இதழாக உருவாகுபவைதான் சிற்றிதழ்கள்.

வணிக நோக்கின்றி, இலக்கு நோக்கி இயங்குகிற இவ்வகை இதழ்கள், பொதுவாக வண்ண வண்ண அச்சடிப்புகளற்று, அதிக பக்கங்களற்று, கால வரையறைக்குள் வெளியிட இயலாமல் தடுமாறி வெளியாகுபவை. இவை தனிமனிதரது பொருளாதாரத் துணையுடனோ, அல்லது குழுவினரிடமிருந்து பெற்ற ஆண்டு நன்கொடையிலிருந்தோ தங்கள் இதழ்களை வெளியிடுகின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் இவை அச்சாக்கப்பட்ட போதிலும், இவற்றின் இருப்பு, காலம் கடந்து பேசப்படுவதாக, வரலாறு காட்டுவதாக உள்ளன.

இன்றைய சூழலில் தமிழகத்திலிருந்து வெளிவருகிற 100 க்கும் மேற்பட்ட இதழ்களில் 40 விழுக்காட்டிற்கும் குறைவான இதழ்களே மேற்கூறிய இயங்குதளத்தை உடையனவாக உள்ளன. மற்றவை தனிமனித புகழ்பாடுதலோடு, பொழுதுபோக்கையே முன்னெடுப்பதால் அவற்றின் இருப்பு கானல்நீராகவே மாறுகிறது.

மிகக் குறைந்த எண்ணிக்கையில் வரும் சிற்றிதழ்களும்கூட தனித்தனியாக ஒவ்வொரு இலக்கை ( தமிழியம், இலக்கியம், தெளிதமிழ், சுற்றுச் சூழல், தலித்தியம், ஒடுக்குதலுக்கான எழுதல், இயக்கம், கல்வி, சட்டம், மருத்துவம், அமைப்பு எனத் தனித்தனியாக ஒவ்வொரு இலக்கை) முதன்மைப்படுத்தி இயங்குவதால், அந்த இலக்கை ஒட்டிய நுட்பச் செய்திகளைத் திரட்டி வெளியிடுவதால், இவைகள் பொதுவான ஒரு கருத்தை முதன்மைப்படுத்தி, தொடர்ச்சியாக அவற்றை வெளியிடத் திட்டமிடுவதில்லை. குழுக்குழுவாக இவற்றின் இயக்கம் தனிமைப் படுத்தப்படுகிறது.

இருந்தாலும் இவை அனைத்தும் பொதுவான இயங்குதளமான தமிழியத்தை முதன்மைப்படுத்துவது போலவே இயங்குகின்றன. இவை அனைத்தும் தமிழில்தான் வெளியிடப்படுகின்றன. தமிழ் மக்கள் படிப்பதற்காகத்தான் அச்சாக்கப்படுகின்றன. தமிழ் மக்களது முன்னேற்றம் கருதித்தான் இயங்குகின்றன.

இன்றைய சூழலில் தமிழியம், இலக்கியம், தெளிதமிழ், இயக்கம் பற்றிப் பேசும் இதழ்களும்கூட கருத்தியலின் உட்பிரிவுகளான வேறு வேறு பிரிவுகளை முதன்மைப்படுத்தி இயங்குவதால் பொதுவான ஒரு கருத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்லவில்லை. இன்றைய சூழலில் பொதுவான கருத்தான தமிழியச் செய்திகளை அனைத்துத் தமிழ் சிற்றிதழ்களும் “உறுதியோடு முன்னெடுத்துச் செல்லவேண்டியதும், தொடர்ச்சியாகச் சொல்ல வேண்டியதும்” தவிர்க்க முடியாததொன்றாகும். இது ஏன் ? இன்னும் சில ஆண்டுகளுக்குள் தமிழ் தெரிந்தவர்களது எண்ணிக்கை குறைந்து விடக்கூடாதல்லவா !? அதற்காகத்தான்.

எனவே இன்றைய சூழலில் தமிழில் வெளியாகும் அனைத்துச் சிற்றிதழ்களும் கீழ்க்காணும் தமிழியக் கருத்துகளை அவரவரது புரிதலுக்கு ஏற்றவாறு தங்கள் இதழில் வெளியிட்டுப் பரப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

1. தமிழருக்கு என்று ஒரு நாடு இருந்தால், அதில் தமிழ்தான் பேசப்படவேண்டும்.

2. தமிழருக்கான நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது சட்டமாக்கப் படவேண்டும்.

3. தமிழர்கள் வாழுகிற நாட்டில் தொடக்கக்கல்வி தமிழ்வழிக் கல்வியாக / தமிழியக் கல்வியாக இருக்கவேண்டும்.

4. தமிழர்கள் தங்களது பொருளாதார நிலைகளை உயர்த்திக் கொள்ளவேண்டும். இதற்காகப் தொழில் துறையிலும், வாணிகத்துறையிலும் கடினமாக உழைத்து மேலெழ வேண்டும்.

5. தமிழர்களது வரலாறு, கலை, பண்பாடு போன்றவற்றை வளர்தெடுக்கிற வகையில் அனைத்துத் தொடர்புக் கருவிகளும் பின்புலமாக இருந்து வளர்த்தெடுக்க வேண்டும்.

மேற்கூறிய கருத்துகளைச் சிற்றிதழாளர்கள் அனைவரும் அவரவர்களது புரிதல்களுக்கு ஏற்றவகையில் கட்டுரைகளாகவோ, பாக்களாகவோ, உரைவீச்சுகளாகவோ, துணுக்குகளாகவோ படைப்பாக்கங்களாகவோ எழுதவைத்து அவற்றினைத் தொடர்ச்சியாகத் தங்கள் இதழில் வெளியிட்டு - மக்கள் மனதில் தமிழியக் கருத்தோட்டத்தை விதைக்க வேண்டும்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழ்ச் சிற்றிதழ்கள் வெளியாகின்றன. இவைகளுக்கு என்று ஒரு வட்டமும், வாசகர் கூட்டமும் உண்டு. உயர்ந்த சிந்தனையோடு இயங்குகின்ற இந்த வாசகர்களுக்குத் தமிழியச் செய்திகளை விளக்குவதும், தமிழியம் பற்றிச் சிந்திக்க வைப்பதும் தமிழுக்கான ஒரு சரியான அடித்தளத்தை உருவாக்கும்.

எனவே தமிழ்ச் சிற்றிதழ்கள் தமிழுணர்வு விதைப்பைத் தொடர்ந்து வெளியிடுவதைத் தமது " முதன்மைப் பணியாக " எடுத்தியங்குவார்களாக.




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061